Monday 16 April 2012

தொழில் நுட்பத்துடன் கூடிய இயற்க்கை விவசாயம்


எல்லோரும் கடவுளின் குழந்தைகள்.ஆனால் அனைத்து இடங்களிலும் கடவுள் இருக்கமுடியாது என்பதற்காக தாயைப் படைத்தான் என்பார்கள் பெரியவர்கள்.தாயை தெய்வம் என்பார்கள்.அதுபோல கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும்..அந்த கடவுள் என்று சொல்லப் பட்ட இயற்கை..உண்ண உணவு,உடுக்க உடை யும் ஏகத்திற்குக் கொடுத்துள்ளது.ஆனால் ஒவ்வொருவருக்கும் நேரில் வந்து அதனால் கொடுக்க முடியாததால்..விவசாயிகளை படைத்தது என்பேன் நான்.
ஆம்..இப் பூமியில் வாழும் அனைவருக்கும்..மேட்டுக்குடியாயினும் சரி..பரம ஏழையானாலும் சரி..படித்தவனாயினும் சரி பாமரன் ஆயினும் சரி..தொழிலதிபரானாலும் சரி..கூலியாளி ஆனாலும் சரி..அனைவருக்கும்..நெற்றி வேர்வை நிலத்தில் விழ..மண்ணிலே நெல் மணி எனும் முத்தெடுத்துக்
கொடுப்பவன் அவன்.
ஆனால்..சமீப காலமாக அவன் வாழ்வில் நிம்மதி இல்லை..பல்லாயிரக்கணக்கானோர் வறுமை தாங்காமல் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். காரணம்..எல்லாவற்றிலும் புகுந்துவிட்ட செயற்கத் தனம்..விவசாயத்திலும் புகுந்து விட்டதுதான்..ஆம்…இயற்கை வேளாண்மை அழிந்து..ரசாயன உரங்கள்
,மரபணு ஆகியவை வேளாண்மையில் புகுந்துக் கொண்டதே காரணம்.
ஆனாலும்..அதை ஈடுகட்ட விவசாயிக்கு அரசு தரும் உதவியும் அவன் ஏற்கமாட்டான்..காரணம்..அவன் கையைத்தான் பிறர் எதிர்பார்க்க வேண்டும்..பிறர் கையை அவன் எதிர்பார்க்க மாட்டான்.
இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர் (1035-திருக்குறள்)
(தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர்,பிறரிடம் சென்று கையேந்த மாட்டார்.தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவர்)
இயற்கை அனைத்தையும் வாரி வழங்கும் தாய் போன்றது.அதே நேரம் எளிதில் சிதைந்து விடும் வகையில் மென்மையானதும் கூட.அரசுகள் அக்கறையுடன் செயல் பட்டு நில வளத்தை ஆரோக்கியமாக பாராமரித்தால், பதிலுக்கு அதுவும் மனிதத் தேவைகளை ஆரோக்கியமாக பூர்த்தி செய்யும்.விவசாயத்தின் வசந்த காலமாக இயற்கை வேளாண்மை எப்போதும் திகழும் என்பது உலக முழுதும் உள்ள இயற்கை
விவசாயிகளின் ஆத்ர்ஷ புருஷராகத் திகழ்ந்த புகோகா வின் வார்த்தைகள்.
இயற்கை வேளாண்மைப் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு முன் ‘வேளாண்மை’ என்பதற்கான பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உதவி ஆம்..திருவள்ளுவர் வேளாண்மை என்ற சொல்லை உதவி என்பதற்கு பயன்படுத்தினார்.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
(விருந்தோம்பல்..குறள் 81)
இல்லறத்தைப் போற்றி வாழ்வது..விருந்தினரை வரவேற்று அவர்க்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காகவே.
அதுபோல இயற்கையும்..மனிதன் வாழ செய்யும் உதவியே இயற்கை வேளாண்மை.ஆம்..மனிதன் வாழ இயற்கை தன் செல்வத்தை அள்ளிக் கொடுத்துள்ளது. இயற்கையில் உள்ள வளங்களை ஒருங்கிணைத்து..மண் வளத்தையும்,சுற்றுச் சூழலையும் பாதுகாத்து மகசூலை அதிகப் படுத்தும் முறை இயற்கை வேளாண்மை எனலாம். சுருங்கச் சொன்னால்..நிலம்,நீர்,மரம்,பூச்சி இவைகளை அப்படியே விட்டு விட்டு விளைச்சல் பெருகுவதே இயற்கை வேளாண்மை எனலாம்.
இது வெற்றி பெற வேண்டுமாயின்..மண்,நீர் வளம் சிறப்பாக அமையவேண்டும்.மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை பயன்படுத்தியும்..வீடுகளிலிருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள். அழுகிய காய்கறிகள் கொண்டு கம்போஸ்டு உரம் தயாரித்தும்..மண் புழுவை உபயோகித்தும் இயற்கை உரங்களைப் பெற வேண்டும். பாரம்பரிய முறை விவசாயம் செய்ய ஆட்கள் தேவை.இயந்திரங்களுக்குப் பதிலாக கால் நடைகளை உபயோகிக்கும் போது மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதனால் வேலையில்லா பிரச்னை..வறுமை காரணமாக கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடியேற மாட்டான் விவசாயி.
இயற்கை விவசாயம் செய்கையில் விவசாயிக்கு தன் நிலத்துடன் ஆன உறவு நெருக்கமாகிறது.தன் நிலத்தில் எந்த இடத்தில் உயிர் சத்துகள் உள்ளன..எந்த நில அமைப்பு மோசமாக உள்ளது என அவன் அறிந்திருப்பான். சாணம், எரு போன்றவை, தொழு உரம்,இவற்றை மக்கச் செய்து பயிருக்குப் போடுவதால் மகசூல் கூடுவதுடன், மண் வளம் காக்கப் படுகிறது. இலைகள்,அழுகிய காய்கறிகள் , சோளத் தட்டு,கடலைஓடு இவற்றை மக்கச் செய்வதால் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
ஒரே பயிரை திரும்பத் திரும்ப பயிரிடாமல் மாற்று பயிர்களை பயிரிடுவதன் மூலம் நிலத்திற்கு பயிர் சுழற்சி கொடுப்பதுடன்..மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.பூச்சி நோய் தாக்கம் குறைகிறது.இப்படிச் செய்வதால் ஆண்டுக்கு ஒரு முறை உளுந்து,பாசிப்பயிறு,காராமணி ஆகியவற்றை பயிரிடலாம்.
நிலத்தின் மண் பரிசோதனை மிகவும் அவசியம்.மண்ணில் உள்ள சத்துகள் பற்றி அறிந்து அம் மண்ணிற்கு ஏற்ற உரம் இடுவதால் மகசூலை அதிகரிக்கலாம். சிக்கிம் மாநிலத்தில் 2015க்குள் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாற அந்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் ரசாயன விவசாயமான தற்போதைய விவசாயத்திற்கு விடை கொடுக்கப்படும்.இம் மாநிலத்தில் 1997 முதல் பிளாஸ்டிக்..மற்றும் ரசாயன கழிவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.வேதியியல் விவசாயத்தை ஒழித்துக் கட்ட வேதியியல் ரசாயன மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் இயற்கை விவசாயத்திற்கு மாறினாலும் இவர்களுக்கு இயற்கை விவசாயத்தின் பலன் உடனடியாகக் கிடைக்கவில்லை.ஆனால் தொடர் முயற்சியால் தற்போது மலடாயிருந்த மண்வளம் மீட்கப்பட்டு..நற்பலன்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்துள்ளனவாம். சிக்கிமின் இந்த வெற்றி மெதுவாக இமாச்சல பிரதேசம்,அந்தமான் நிகோபார்
தீவுகளிலும் பரவத் தொடங்கிவிட்டது.
வாழும் சூழலும்..உழவும்..இரண்டுமே மனித வாழ்வில் பின்னிப்பிணைந்தவை. பூச்சிக் கொல்லி ரசாயனம்..உப்பு உரங்கள் இவற்றால் லாபமும் கிடையாது, விவசாயிக்கும் கடன் அதிகரிக்கும், விளை நிலமும் தரிசு நிலமாகும்.
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறுகையில் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பகுதி காடாக இருந்தது.ஆனால் 1986 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப் பட்ட ராக்கெட் 11 விழுக்காடு மட்டுமே காடு இருப்பதாகக் காட்டியுள்ளது.அதிலும் மூன்று விழுக்காடு முற்புதர்கள்.(உலகளவில் ஐந்தில் நான்கு பங்கு காடுகள் அழிக்கப்பட்டு விட்டன..)
இயற்கை வழி மேலாண்மை என்பது யூரியாவிற்கு பதில் சாணி போடுவதில்லை.உயிர் இல்லா இயற்கை..உயிர் உள்ள இயற்கை இவற்றிற்கிடையே உள்ள உறவுகளை அறிந்து பயிர் செய்வது.எடுத்துக் காட்டாக பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம்.அவற்றை உண்ணும் பூச்சிகளும், குருவிகளுமே உலகில் அதிகம்.பூச்சிகளைக் கொல்ல நஞ்சு தெளிக்கையிலே நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்தன.
ரசாயன உரங்கள் விளைச்சலை உயர்த்த உற்பத்தி செய்யப்பட்டது அல்ல.உலகப்போரின் போது போர்க்களத்தில் வெடி உப்பு தயாரித்த கம்பெனிகளுக்கு..போரில்லாக் காலத்திலும் லாபம் உண்டாக்கவே ரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.அதுபோல பூச்சிக் கொல்லி மருந்துகள் பூச்சிகளைக் கொல்ல கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல.இரண்டாவது உலகப் போரில் ரஷ்ய படை வீரர்களைக் கொல்ல கிணற்றிலும்,ஆற்றிலும் கொட்ட ஹிட்லர் படையைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு அவை.போர் முடிந்த பின்னும் இக் கம்பெனிகள் லாபம் ஈட்ட பூச்சி மருந்து என விவசாயிகளின் தலையில் இவை கட்டப்பட்டன.
இதன் விளைவாக தானியம்,பருப்பு,காய்கறி,இறைச்சி,பால் அவ்வளவு ஏன் ..தாய்ப்பாலும் நஞ்சானது.இதனை 1984ஆம் ஆண்டு கோவை வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது.ஆனால் 26 ஆண்டுகள் கடந்தும்..இதுவரை இயற்கை வழிப் பயிர் பாதுகாப்பு பற்றி அரசு புதிதாக எதுவும் முயற்சி எடுக்காதது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது.
இன்று..
நிறைய விளைச்சல் எடுத்த நிலம் வளமிழந்து தரிசாகி விட்டது.விளைநிலங்களில் பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட முடியாத விவசாயிகள் வேலை தேடி தங்கள் நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு குடி பெயர்கின்றனர். பல விளைச்சல் நிலங்களில்..தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு விட்டன. பல விளைச்சல் நிலங்களில் பொறியியல் கல்லூரிகள் கட்டப்பட்டுவிட்டன. பல விளைச்சல் நிலங்களில் குடியிருப்பிற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுவிட்டன.
இதையெல்லாம் அறிந்தும் இன்று விஞ்ஞானிகள் மண்ணுக்கும்,உழவிற்கும்,மனித குலத்திற்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களையும், மரபணு மாற்ற விதைகளையும் பரப்ப முயற்சி எடுத்து வருகின்றனர். வணிகத்திற்காக..ரசாயன உரங்கள்,எந்திர வேளாண்மை ஆகியவை புகுந்ததால் தான்
வேலையில்லாத் திண்டாட்டமும் உருவாகிறது, விவசாயிகளும் அழிகின்றனர் காடுகள் அழிந்ததால் மழை அழிந்தது.சாகுபடி இழப்பு,வடிகால்கள்,ஏரிகள்,கண்மாய்கள் தூர் வாராததால் வெள்ளப்
பெருக்கும்..சாகுபடி இழப்புமேற்படுகிறது.
65000 ஏரி,கண்மாய்,குளம்,குட்டைகள் இருந்தன தமிழகத்தில் மட்டும்.ஆனால் இன்று பெரும்பான்மையானவை வரப்புகள் வெட்டப்பட்டு பேருந்து நிலையங்களாகவும், அரசு குடியிருப்புகளாகவும் மாறி விட்டன. பூமியை ஆழமாக ஆழ்துளை கிணறு வெட்டி தண்ணீரை எடுத்து, தென்னை,கரும்பு பயிர் சாகுபடியாகின்றன.
மரபணு கத்திரிக்காயில் பூச்சி இருக்காதாம்.எப்படி இருக்கும்..அதில் நச்சுத்தன்மை உள்ளதே!அதனுள் பூச்சி எவ்வாறு வளரும். ஆனால் இயற்கை வளத்தில் பிறந்த கத்திரிக்காயில் பூச்சியைக் கொல்லும் விஷம் இல்லைஅதில் உள்ள புழுவை..நாம் காயை நறுக்குகையில் அப்புறப்படுத்தலாம்.ஆனால் அதேபோல நஞ்சை அப்புறப் படுத்த முடியாதே.
மரபணு மாற்று..
உணவை நஞ்சு உள்ளதாக இருக்க வைக்கும் மனித உடலில் ஒவ்வாமையை உண்டு பண்ணும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஒழிக்கும் ஆண்மை அற்றவனாக ஒருவனை ஆக்கும்
பீ.டி.மரபணு கத்திரிக்காய் மட்டுமல்ல வெண்டை,நிலக்கடலை,தக்காளி,சோளம்,கடுகு,நெல்,உருளைக் கிழங்கு,வாழை என அனைத்துப் பொருள்களிலும் மாசை ஏற்படுத்தும். மரபணு புகுந்து விட்டால் எதையும் இயற்கையில் விளைந்தது என சொல்ல முடியாது. சர்க்கரை நோய்,புற்று நோய்,ஆண் மலடு,நரம்புக் கோளாறு,சளித்தொல்லை ஆகியவற்றை இவை ஏற்படுத்தும்.
சரி..இயற்கை வேளாண்மைக்கு உடனடியாக மாற முடியுமா?
முடியும்.. இயற்கை வேளாண்மைக்குத் திரும்பினால், முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகும்.வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும்.
வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும் வேதியல் பூச்சிக் கொல்லிகளுக்குப் பதிலாக, உயிரியல் பூச்சிக்கொல்லிகளும் பயன் படுத்தப் பட வேண்டும்.டிராக்டர்களுக்குப் பதிலாக கால்நடைகளைக் கொண்டு உழ ஆரம்பிக்கலாம்.நீர்ப்பாசனத்தை நம்பினால் பருவகாலங்களில் மழையின் அளவைக் கணக்கில் கொண்டு அதற்கேற்ப பயிரை பயிரிடலாம்.
விவசாயத்தில் இதனால் அதிக உள்ளூர் மக்கள் ஈடுபட வேண்டியிருக்கும்.இதனால் விவசாயிகள் நகரங்களுக்கு வெளியேறுவது குறையும். மூன்று வருஷங்களிலிருந்து..ஐந்து வருஷங்களுக்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும்.மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பயிருக்குக் கூடுதல்
விலை கிடைக்கும்.ஆனால் மண்வளம் எப்போதும் பாதுகாக்கப் பட வேண்டும்.
இதற்கு ஒரு உதாரணம்..கியூபா.. கியூபாவில் நாடு முழுதும் இயற்கை வேளாண்மைக்கு மாறியது.மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும் அரசு பண்ணைகளும் பயிர் பாதுகாப்பிற்காக
பூச்சிகளைக் கட்டுப்படுத்த உயிரியல் பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்தன. மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப் படுத்த நுண்ணுயிரிகள் பெருமளவில் பயன்படுத்தப் பட்டன.களைகளைக் கட்டுப் படுத்த பயிர் சுழற்சி கடைபிடிக்கப் பட்டது.
மண்ணை வளப்படுத்தி..கால் நடைகளிலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும்,தாவர உரங்களை பயன்படுத்தியும், வீட்டுக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரித்தும்..மண்புழுக்களைக் உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரித்து பயன்படுத்தினர்.உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு இயற்கை உரங்கள் பயன்படுத்தப் பட்டன.
இவ்வாறு மிகப் பெரிய அளவிற்கு இயற்கை வேளாண்மைக்கு கியூபா மாறாமல் இருந்திருந்தால்..சோமாலியாவில் ஏற்பட்ட உணவு பற்றாக்குறை இங்கும் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் இயற்கை வேளாண்மை நிலையை உருவாக்க.. மரம்,செடி வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களை வேளாண்துறை இலவசமாக தீர்த்து வைத்து..உதவவும் செய்கிறது.
விவசாயத்தில் ஈடுபட இளஞர்களுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.அப்போதுதான் இளைஞர்கள் அத்துறையில் நிறைய சாதிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள் கிராமப்புறங்களுக்கு வந்து விவசாயத்தைக் கவனிக்க வேண்டும்.அவர்களை அரசும் ஊக்குவிக்க வேண்டும். .மலைக்காடுகள் அழியாமல் ..பசுமைக் காடுகளை உருவாக்கி..இயற்கை வளத்தை மீட்க வேண்டும்.
இப்போது தமிழகத்தில் நம்மாழ்வார் போன்றவர்கலும்..கர்நாடகாவில் பாலேக்கர் ஆகியவர்களும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றனர். நாடு முழுதும் இயற்கை விவசாயம் மீண்டும் உருவாகி..விவசாயிகள் வாழ்வு தழைத்து..தற்கொலைக்கு அவர்களை விரட்டாத நாள் உருவாக வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையாக இருக்கட்டும்..
கடைசியாக ..பல அரசுகளை தன் குடையின் கீழ் கொண்டுவரும் வலிமை பெற்றவன்
விவசாயி..அவனையும்..அவனால் பயிடப்படும் ..நம் வயிற்றை நிரப்பும் கடமை நமக்கு உண்டு என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியுள்ளது.ஆகவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)

நன்றி: மணற்கேணி

இயற்க்கை விவசாயம்

இயற்கை வேளாண்மையை நோக்கி ஓர் இனிய பயணம்
“சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
உலகில் எண்ணற்ற தொழில்கள் நடந்து வந்தாலும் ஏர்த்தொழிலாம் விவசாயத்தின் பின்னால் தான் இந்த உலகம் இயங்குகின்றது. விவசாயம் தான் உலக ஜீவராசிகள் அனைத்திற்கும் உயிர் ஊட்டுகிறது.
தரணியைக் காக்கும் தலையாய தொழிலாம் வேளாண்மை, ஆண்டவனால் அனுப்பப்பட்ட ஆதி மனிதன் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. மனிதன் நாகரிகம் அடைவதற்கு வழிவகுத்தது விவசாயம் தான்.
வேளாண்மை என்பது உலக உயிர்களின் பசியைப் போக்குவதற்கு பயிர்களை விளைவிப்பதாகும்.
இன்று உலகில் பல்வேறு மக்கள் பல முறைகளில் வேளாண்மை செய்கின்றனர், அதில் பண்பட்ட மக்கள் மண்ணைப் புண்படுத்தாத இயற்கை வேளாண்மை செய்கின்றனர்.
இயற்கை பற்றாளர்
இயற்கை வேளாண்மை பற்றி பேசும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக இயற்கை வேளாண்மையின் தந்தை மசானபு ஃபுகோகா அவர்களை பற்றியும், அவர்களின் கருத்துகளைப் பற்றியும் இங்கு கட்டாயம் நினைவு கூற வேண்டும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஃபூகோகா அவர்கள் இயற்கையின் பின்னணியில் செடிகள் வளர்ப்பில் பல ஆராய்ச்சிகள் செய்து தமது “ஒற்றை வைக்கோல் புரட்சி” எனும் நூலின் மூலம் இவ்வுலகிற்கு இயற்கை வேளாண்மையின் .இன்றியமையாமை பற்றி எடுத்தியம்பினார்.
அவர் தன் நூலில் இயற்கை வேளாண்மைக்கு என சில கொள்கைகளை கூறுகின்றார். அவை 
௧. எந்த ஒரு இரசாயன உரங்களும் தேவை இல்லை
௨. பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவை இல்லை
௩. அடிக்கடி களை எடுக்கத்தேவை இல்லை
௪. அடிக்கடி மண்ணை உழத்தேவை இல்லை
௫. இயந்திரங்களும் தேவை இல்லை
இயற்கையே அனைத்தையும் நிகழ்த்தும், மனிதன் எதுவும் செய்யத் தேவை இல்லை என்கிறார். அவருடைய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்று உலகில் பல இடங்களில் இயற்கை விவசாயம் நடை பெற்று வருகிறது .
இயற்கை வேளாண்மை
இயற்கை வேளாண்மை என்பது இயற்கையின் இதயத்தை இம்சைப்படுத்தாமல் செய்வது, இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது.இயற்கையினுள் செயற்கையை புகுத்தாமல் இயற்கையை இதமாக அதன் போக்கில் விடுவது,இரசாயனத்தைப் புகுத்தி இயற்கையை ரணப்படுத்தாமல் இருப்பது.
இயற்கை வேளாண்மை என்பது உயிருக்கு தீங்கு விளைவிக்கின்ற இரசாயன உரங்களையோ, வேதியியல் பூச்சிக்கொல்லிகளையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வதாகும். இயற்கை வேளாண்மைக்கு எனத் தனியாக எந்தவொரு கொள்கைகளும் வகுக்கப்படவில்லை.
இயற்கை வேளாண்மையில் முக்கியமானது பயிர் சுழற்சி முறை மற்றும் கலப்பு பயிர்கள் பயிருடுதலாகும்.
பறவைகளைப் பார்த்து பறக்க கற்றுக்கொண்டோம்
மீன்களைப் பார்த்து நீந்த கற்றுக்கொண்டோம்
இயற்கையை ஆழ்ந்து கவனித்தாலே இயற்கை வேளாண்மையை கற்றுக்கொள்வோம்
இயற்கை வேளாண்மை என்பது “இயற்கையின் சுழற்சிகளை மையமாக கொண்டு செயல்படும் வேளாண்மை முறை” இயற்கையின் போக்கில் இணைந்து விவசாயம் செய்வது தான் இயற்கை வேளாண்மை. காட்டிலுள்ள மரங்களை பார்த்தாலே இயற்கை வேளாண்மையை கற்று கொள்ளலாம். காட்டில் யாரும் விதைகளை விதைப்பதும் இல்லை, உழுவதும் இல்லை, களைஎடுப்பதும் இல்லை அவை தானாகவே வளருகின்றன. அதன் நல்வளர்ச்சிக்கு காரணம் நல்ல வளமான மண் அங்கு இருப்பதேயாகும், மேலும் மரங்களிலிருந்து விழும் இலை தழைகள் போன்றவை அப்படியே நிலத்தில் விழுந்து மூடாக்காகி மண்ணிற்கு ஈரப்பதத்தை கொடுகின்றது, இது தான் இயற்கை வேளாண்மையின் அடிப்படை.
நாமும் இதே போல “ஏதும் செய்யாத வேளாண்மை”யை செய்யலாம், ஆனால் இன்றிருக்கும் நிலையில் நம் மண் வளம் தரமற்றதாகிவிட்டது, மலடாகிய மண்ணை நல்ல மகசூல் கிடைக்கும் மண்ணாக மாற்ற நாம் சில தொழில்நுட்பங்களை இயற்கை வேளாண்மையில் புகுத்த வேண்டும். அவை பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர் பயிருடுதல், உயிர் பூச்சிக்கொல்லிகள் போன்றவற்றை பயன்படுத்துவதாகும். மேலும் ஒற்றை நாற்று நடவு, மூடாக்கி போடுதல், உரக்குழிகள் வெட்டுதல், பயிர்களுக்கு இடையே காற்றோட்டத்தை பராமரிப்பது, நாட்டு விதைகளை பயன்படுத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் இயற்கை வேளாண்மையுடன் இணைந்ததாகும்.
பாரம்பரிய வேளாண்மை
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்னும் பழமொழிக்கேற்ப உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி ஆராய இங்கு முடியாததால் நம் தாய் திருநாடான இந்தியாவில் நடக்கும் இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் இக்கட்டுரையில் எடுத்தியம்பியிருக்கிறேன்.
இந்தியாவின் முதுகெலும்பே விவசாயம் தான். அதன் புகழை தரணியில் உயர்த்தியதே அதன் தங்கப்புதல்வர்கள், தவப்புதல்வர்களாகிய விவசாயிகள் தான்.
அதனால் தான் நமது முன்னால் பிரதமர் திரு. லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் “ஜெய் ஜவான், ஜெய் கிஸான்” எனப்புகழ்கின்றார். இந்திய மக்கள் தொகையில் 64சதவீத மக்கள் விவசாயத்தை முழு நேரத்தொழிலாக செய்து வருகின்றனர்.
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றி தரு நாடு”
– என்று முண்டாசு கவிஞன் பாரதியால் புகழப்பட்ட நம் நாட்டில் இயற்கை வேளாண்மை என்பது நாம் மூதாதையர்களின் காலத்திலிருந்தே நடந்து வருகிறது. நம் சங்க இலக்கிய நூல்கலான புறநானூறு, குறுந்தொகை போன்றவற்றில் கூட இயற்கை வேளாண்மை பற்றி பல குறிப்புகள் உள்ளன.
நம் முன்னோர்கள் எந்த ஒரு இரசாயன உரங்களையோ, களைகொள்ளிகளையோ பயன்படுத்தாதலால் தான் மாடு கட்டி போரடித்தால் மாளாது என யானை கட்டி போரடித்தனர், அதிகளவு மகசூல் பெற்றனர்.
தமிழ் மறையாம் திருக்குறளிலும் வேளாண்மையைப் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
“தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்”
-உழவன், ஒரு பலம் புழுதி கால்பலமாகும் படி தன் நிலத்தை உழுது காய விட்டால், ஒரு பிடி எருவும் இடாமலேயே அந்நிலத்தில் பயிர் செழித்து வளரும்.
இக்குறளின் மூலம் உழுதலின் அவசியத்தை புரிந்து கொள்கின்றோம், நன்கு உழுவதன் மூலம் காற்றோட்டம் அதிகமாகிறது. நிலத்தில் உள்ள இலை தழை போன்றவையெல்லாம் மட்கி நல்லதொரு வளத்தை மண்ணிற்கு கொடுகின்றது என அறிகின்றோம்.
திருவள்ளுவர் உழவு எனும் அதிகாரத்திலேயே விவசாயம் பற்றிய பல விசயங்களை புரிய வைக்கின்றார்.
“ஏரினும் நன்றால் எரு இடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு”
- ஏர் விட்டு உழுதலை விட எரு இடுதல் நல்லது, இவ்விரண்டும் செய்து களை எடுத்த பிறகு நீர் பாய்ச்சுவதை விட பயிரை அழியாமல் காப்பது நல்லது” – எனும் குறலின் மூலம் நம் முன்னோர்கள் பயிர்களுக்கு இயற்கை முறையில் எரு போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தியதை அறிகிறோம், மேலும் வேளாண்மைக்கு எது சிறந்ததென ஒரு குறலின் மூலமே அறிகிறோம்.
ரிக் வேத காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பயிர்களுக்கு வளம் ஊட்ட பசு மாட்டின் பால்,நெய்,தயிர்,கோமியம் மற்றும் வெண்ணை போன்றவற்றின் கலவையான பஞ்சகவ்யாவை பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் விதைகளை விதைக்க மூங்கில் விதைப்பான் போன்ற ஆயுதங்களையும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தேவை ஒரு மாற்றம்
“யானைக்கும் அடி சறுக்கும்” என்பார்களே அது போல விவசாயத்திலும் அதிக வளர்ச்சிகளை கொண்டிருந்த நம் நாட்டிலும் 1960-65 ஆம் ஆண்டுகளில் கடும் பட்டினி,பஞ்சம் ஏற்பட்டது.
மக்களின் பஞ்சத்தை போக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆகியவை சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி செய்தன, அதன் மூலம் நாம் பயிர் விளைச்சலில் தன்னிறைவு அடைந்தோம். ஆனால் நாம் பாரம்பரிய முறைகளை கைவிட்டு ரசாயன உரங்களையும், வேதியியல் பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் நம் உடமையாக ஆக்கிக்கொண்டோம். ரசாயன உரங்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் மானியம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காகவும் அதனை பயன்படுத்துவதால் மகசூல் கூடுகிறது என்ற எண்ணத்தினாலும் நவீன கால வேளாண்மையான ரசாயனங்களை மையமாக கொண்ட வேளாண்மை நம்மை நன்கு ஆக்கிரமித்து கொண்டது.இதன் விளைவாக நாம் வளமான மண் மலடாகியது, பொன் விளையும் பூமி இன்று புண்ணாகியது.
பசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நாம் இன்று பல நோய்களை அனுபவிக்கின்றோம் நீரழிவு, புற்றுநோய், மலட்டுதன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான். இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.
இன்று விவசாயம் என்னும் பெயரில் பயிர்களுக்கு விஷச்சாயம் பூசும் பணி நடக்கின்றது. “சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு நம் மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.” வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.
“சென்றதினி மீளாது மூடரே” எனும் பாரதியின் வாக்கிற்கு ஏற்ப கடந்தததை நினைத்து வருந்தாமல், நாம் செய்த தவற்றை திருத்த இதுவே உகந்த நேரம். நம் வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வேண்டுமென்றால், வளம் குன்றிய மண்ணை அவர்கள் வசமாக்காமாலிருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே தீர்வு, நிரந்தரதீர்வு நாம் அனைவரும் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிப்பதாகும்.
தற்கால நவீன விவசாயத்தில் அதிக அளவு ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக முதலில் மகசூல் அதிகமானாலும், பின்னால் மண்ணின் வளம் குன்றி விவசாயத்தின் வளர்ச்சி குன்றி விட்டது. சுற்றுசூழல் சீர்கேட்டையும், மனித ஆரோகியத்தையும் கெடுத்து விட்டன.
“தேசிய குற்ற ஆவண அமைப்பின் கணக்கெடுப்பின் படி 1997 லிருந்து 2007ம் ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை 1லட்சத்து 82 ஆயிரத்து 936 ஆகும்.
“பலகுடை நீழலும்தம் குடைக்கீழ்க் காண்பார்
அலகுடை நீழலவர்”
– அரசாளும் மன்னர்களே ஆனாலும் உலகுக்கு உணவு படைக்கும் விவசாயியின் குடையின் கீழ்தான் இருப்பர் என்றார் வள்ளுவர்.
அப்படி உயர்வாக புகழபெற்ற உழவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கெல்லாம் காரணம் விவசாயத்தை பற்றிய சரியான புரிதல் இல்லாமையும், ரசாயனங்களை நம்பியதாலும் தான். ஆனால் இயற்கை விவசாயத்தில் ரசாயனம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
செடி வளர்வதற்கு தேவையான தழைச்சத்து (நைட்ரஜன்) கிடைப்பதற்கு நாம் நவீன ரசாயானத்தை மையமாகக்கொண்ட விவசாயத்தில் யூரியா போன்ற உரங்களை போடுகின்றோம். ரசாயன உரங்களில் உள்ள நைட்ரேட் மழைபெய்யும் காலங்களில் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு நிலத்தடி நீரை அசுத்தப்படுத்துகிறது. இப்படி சுற்றுசூழலை மாசடைய செய்யும் வேலை இயற்கை வேளாண்மையில் இல்லவே இல்லை.
இயற்கை வேளாண்மை முறையில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து போன்றவை கிடைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் கலப்பு பயிர் முறை. ரைசோபியம் எனும் பாக்டீரியா தான் தழைச்சத்தை வளிமண்டலத்திலிருந்து கிரகித்து செடிகளுக்கு கொடுக்கிறது. கலப்பு பயிராக நாம் துவரை, அவரை போன்ற இரு வித்திலை தாவரங்களை பயிரிடும்போது ரைசோபியம் எனும் பாக்டீரியாக்கள் அத்தாவரங்களின் வேர் முடிச்சுககளில் பல்கி பெருகுகின்றது. இதனால் மண்ணிற்கு தழைச்சத்து கூடுகிறது மண்ணும் வளமடைகிறது.
பயிர் சுழற்சிமுறை
நிலத்தில் ஒரே வகையான பயிர்களை பயிரிடாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும்
இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சமான பயிர் சுழற்சி முறையை நம் முன்னோர்கள் முறையாக செய்தனர். முதல் பருவத்தில் நெல், அடுத்த பருவத்தில் உளுந்து , அதற்கடுத்து பயறுவகைகள் என மாறி மாறி பயிரிட்டனர். பயிர் சுழற்சி முறையினால் மண்ணின் வளம் கூடும் என நன்கு தெரிந்திருந்தனர்.
இயற்கை வேளாண்மையில் சம்பா நெல்லுக்கு பிறகு உளுந்து, குறுவை நெல்லுக்கு பிறகு தாளடி நெல், அதற்கு பிறகு சம்பா நெல் அதனூடே சணப்பு இப்படித்தான் மாற்றி மாற்றி பயிர் செய்ய வேண்டும். முதலில் சணப்பு விளைந்த பின் அதன் விதையை நீக்கி மூடாக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறும். இன்று நம் விவசாயிகள் இதே முறையை பின்பற்றுகின்றனர்.
பயிரின் வளத்தை தீர்மானிப்பது மேல் மண்ணாகும், மேலும் நிலத்தை சில நாட்கள் தரிசாக போட்டு வைத்தொமென்றால் , களைத்துபோன நிலம் புத்துயிர் பெறுகிறது. பல்லாயிரம் வருடங்களாகவே இந்த யுக்தியை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர், இப்படி மண்ணை தரிசாக போட்டு வைக்கும் போது அம்மண்ணில் கொழிஞ்சி, அவுரி, கரந்தை உள்ளிட்ட செடிகள் முளைத்து ஈரத்தை தக்க வைக்கின்றன, மேலும் பயிர் விளைவிக்க அந்த மண்ணை உழும் பொழுது அச்செடிகளை மடக்கி போட்டால் நல்லதொரு உரமாக மாறுகின்றது.
கலப்பு பயிர்களின் நன்மை
பழங்காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் பலதரப்பட்ட பயிர் வகைகளை கலந்து பயிரிட்டு வந்தனர், இப்படி கலந்து பயிரிடுவதால் ஒரு செடியின் தேவையை மற்றொரு செடி நிறைவேற்றும். எடுத்துக்காட்டாக தக்காளி மற்றும் சணப்பு கலந்து பயிரிட்டனர்.இதன் மூலம் தக்காளி மகசூல் கூடியது, சோளத்துடன் தட்டை பயிரை கலந்து பயிரிடும் போது தட்டை பயிரின் நெடி சோளத்தைத் தாக்கும் தண்டு தாக்குதல் நோயைத் தடுக்கும்.
மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலப்பு பயிராக பருத்தியை சாகுபடி செய்கின்றனர். பாசிப்பயறு, துவரை, மொச்சை, கேழ்விரகு, சோளம் , உளுந்து என பல பயிர்களுடன் கலந்து பருத்தியை விதைத்திருக்கின்றனர். இதன் மூலமாக பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் கட்டுப்படுத்தபட்டிருகின்றன, முற்றிலும் அழிக்கப்படுகின்றன. </p.
பருத்தியை தாக்கும் காய் புழுக்கள் பருத்தியை தாக்கிவிட்டு ஒரு செடியிலிருந்து மற்றொன்றுக்குத் தாவுகின்றது. அடுத்த செடியில் அவை வேறு வித சுவையையும் தன்மையயும் உணருகின்றன, இதனால் அதற்கடுத்த செடிக்கு தாவுகின்றன. அங்கும் அவை வேறு சுவயை உணர்வதால் ஒவ்வாமை நோய் ஏற்பட்டு வயல்களை விட்டே ஓடிவிடுகிறது, மேலும் கலப்பு பயிரான பாசிப்பயிறு, மொச்சை போன்றவற்றை அறுவடை செய்தபின் அவற்றை மூடாக்கி போட்டால் மண்ணிற்கு வளமும் கூடுகின்றது, தென்னை மரத்திற்கு நடுவே பப்பாளி, பாக்கு ஆகியவற்றை கலப்பு பாயிராக நடலாம். இன்று மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரியைப்பற்றி பல சர்ச்சைகள் கிளம்பும் இந்நேரத்தில் நம் விவசாயிகள் இயற்கை முறையில் பருத்தியை விளைவிப்பதும், அதன் காய் புழுக்களை கட்டுப்படுத்துவதும் நம் இயற்கை வேளாண்மை முறையால் தான் சாத்தியமாயிற்று. இதுபோல் கலப்புப்பயிர் முறையில் பல நன்மைகள் உள்ளன.
இயற்கை பூச்சிவிரட்டி
ஜெர்மனியை சேர்ந்த பால் முல்லர் என்பவர் 1942ம் வருடம் பூச்சிகளைக் கொள்வதற்காக டீடீபி பூச்சிக்கொல்லியை கண்டு பிடித்தார். பூச்சிகளில் நன்மை செய்யும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் உள்ளன, சிலந்தி, ஊசித்தட்டான், மண்புழு, நண்டு, நத்தை ஆகியவை நன்மை செயும் பூச்சிகள் ஆகும். பச்சைக்காய் புழுக்கள், தரை வண்டுகள், காண்டாமிருக வண்டுகள், அசுவினி, வெள்ளை ஈ, கத்தாழை பூச்சி, குருத்துப்புழு, இடைக்கணு புழு ஆகியவை தீமை செய்யும் பூச்சிகள் ஆகும்.
நம் முன்னோர்கள் பூச்சிகளில் நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளைப்பற்றி அறிந்து இருந்தனர் ., ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும்போது பூச்சிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளும் இறந்து விடுகின்றன. எனவேஇயற்கை மூலிகைகளை வைத்தே பூச்சிகளை விரட்டினார்கள். அவர்கள் பயறுகளில் உள்ள பூச்சிகளைய் நீக்க மிளகாய்வற்றல், மிளகு, காய்ந்த வேப்பிலை போன்ற பொருட்களை உபயோகப்படுத்தினர்.
இன்று இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறவர்கள் இப்பூச்சிகளின் தன்மையை அறிந்திருக்கின்றனர். அதனால் சில மகளிர் குழுக்கள் கூட தங்கள் குழுக்களுக்கு சிலந்தி, ஊசித்தட்டான் என நன்மை செயும் பூச்சிகளின் பெயர்களை வைத்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் இன்ரைய விவசாயிகள் மூலிகை பூச்சிவீரட்டியை பயன்படுத்திகின்றனர்.
மூலிகை பூச்சிவிரட்டி என்பது எருக்கு, நொச்சி, வேம்பு, புங்கன் ,முருங்கை, ஆடதொடை ஆகியவற்றின் இலைகளை கைப்பிடி அளவு இடித்து 10லிட்டர் மாடு கோமியம் கலந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் நன்கு ஊறவைத்து தயாரிப்பதாகும். மேலும் கத்திரிச்செடிகளுக்கு வேப்பங்கோட்டை கசாயம், பூண்டு கசாயம், வசம்பு கசாயம் போன்றவற்றை பூச்சிவீரட்டியாக பயன்படுத்துகின்றனர்.
கத்திரி விளைச்சலுக்கு காய்ப்புழு, அசூவினி, இழை சுருட்டு புழு போன்ற பிரச்சனைகள் வரும், இவற்றையெல்லாம் நீக்க வேம்பு எண்ணெய், புங்கன் எண்ணெய், காதி சோப்பு கரைசால் ஆகியவற்றால் தயாரான “பொன்னீம்” என்ற பூச்சிவீரட்டியை பயன்படுத்துகின்றனர். இந்த பொன்னீம் லயொலா கல்லூரியின் தயாரிப்பாகும்.
மூடாக்கு போடுதல்
இயற்கை விவசாயத்தின் முக்கியமான ஒன்று மூடாக்கு போடுதல். வைக்கோலை நெல் போன்ற பயிர்களின் மீது மூடாக்கு போடுவதன் மூலம் மண்ணில் உள்ள மண்புழுக்கள் பெருகுகின்றன, மண் அரிப்பு மற்றும் நீர் ஆவியாவததை தடுக்கின்றது. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது.
பயிருக்கு தேவையான சதுக்களை அதிக மடங்கு கிடைக்க செய்கின்றது, மூடாக்கி போடுவதன் மூலம் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தென்னந்தோப்பில் விழும் மட்டைகள், ஓழைகள் போன்றவற்றை எரிக்காமல் அவற்றை மரத்தை சுற்றி மூடாக்கி போட்டால் களைகள் கட்டுப்படும்.
நவீன விவசாய முறையை பின்பற்றும் விவசாயிகள் கரும்பு வெட்டும் பொழுது சோகைகளை அப்படியே விட்டு விடுவார்கள். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அந்த சோகைகளை முடக்கு போட்டு தண்ணீர் பாய்ச்சிடுவார்கள், இதனால் மொத்த சோகைகளும் மட்கி நல்லதோர் உரமாகும். மூடாக்கி போடுவதால் மகசூல் கூடுகிறது, தண்ணீர் செலவு குறைகிறது.
ஜீவாமிர்தம்
இயற்கை வேளாண்மையில் நம் விவசாயிகள் அதிகளவு ஜீவாமிர்தம் பயன்படுத்திக்கின்றனர்.
ஜீவாமிர்தம் மண்ணீலுள்ள நுண்ணுயிரிகளை பெருக்கும் ஊடகம், இது ஊட்டச்சத்துகளை செடிகள் எடுத்துகொல்லும் வேலையைச் செய்கிறது.
இயற்கை வேளாண் வித்தகர் திரு. சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்த்ததின் நல்ல பயன்களை பற்றி விவசாயிகலுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஜீவாமிர்தம் எனப்படுவது நாட்டு பசுஞ்சாணம், நாட்டு பசுமூத்திரம், கருப்புநிற வெல்லம், தானிய மாவு, மண் போன்றவற்றின் கலவையால் தயாரிக்கப்படும் நுண்ணுயிர் ஊக்கியாகும்.
“ஜீவாமிர்தம் போன்ற நுண்ணுயிர் ஊக்கிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை வேகமாக செயல்பட வைத்து, மண்ணை வளப்படுத்தி எல்லாவித சத்துகளையும் மண்ணிற்கு தருகின்றது”. இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் ஜீவாமிர்தத்தின் நற்பயன்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்தியம்பி அதன் மூலம் நல்லதொரு பசுமையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.ஜீவாமிர்தத்தை மிகக்குறைந்த செலவில் தயாரித்து, பயிர் வளர்ச்சியில் நிறைந்த லாபத்தை நம் இயற்கை விவசாயிகள் அடைந்துள்ளனர். இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக்கரைசலின் பயன்பாடும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் முளைப்புத்திறன் கூடுகிறது, வளமான நாற்றுகள் உருவாகின்றன, இன்று பல விவசாயிகள் இதனை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இயற்கை வேளாண்மையில் யூரியாவிற்கு நல்லதொரு மாற்று பொருளாக நெய்வேலி காட்டாமணக்கு அமைந்துள்ளது.”1962ம் ஆண்டிலிருந்தே தமிழக உழவர்கள் தழைச்சத்துக்காகவும், பூச்சி விரட்டியாகவும் இதனை பயன்படுத்துகின்றனர்”.
மேலும் மண்ணை வளப்படுத்த இயற்கை வேளாண்முறையில் பல தொழில்நுட்பங்கள் உள்ளன
ஆழமாக வேர் விடும் தாவரங்களை பயிரிட்டால் அவை ஆழத்தில் உள்ள சத்துகளை உறிஞ்சுகின்றன. மேலும் அவற்றை மடக்கி உழும் பொழுது தனது தாவரப்பாகங்களை பூமிக்குத் தருகின்றன, இதனால் மண்ணின் வளம் கூடுகின்றது.
இயற்கை வேளாண்மையில் இரசாயன உரங்களுக்குப் பதிலாக நம் மக்கள் தொழுவுரம், கோழி எரு, ஆட்டுப்புழுக்கை போன்றவற்றை அடியுரமாக போடுகின்றனர். இதனால் மண் புழுக்களின் எண்ணிக்கையும் பெருகுகின்றது.வயல் வெளிகளில் ஆட்டுக்கிடை போடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே உள்ளது. கிராமப்புறங்களில் கருக்கலில் எழுந்து பெண்கள் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வயல் வெளிகளில் போடுவர், இவையெல்லாம் நல்ல இயற்கை உரமாகும்.
ஈரோடு மாவட்டத்தில் ஆட்டு ஓட்டம் நல்லதொரு பயிர் வளர்ச்சி ஊக்கியாக உள்ளது.
ஆட்டு ஓட்டம் என்பது வெள்ளாடு கோமியம், வெள்ளாடு எரு,பால், தயிர்,பசு நெய், இளநீர் ஆகியவற்றின் கலவையால் செய்யும் இயற்கை பொருளாகும்.
பாரம்பரிய விதைகள்
பாரம்பரிய விதைகள் உணவுக்காக மட்டும் இன்றி மருந்தாகவும் பயன்பட்டது.பாரம்பரிய விதைகளை
பயன்படுத்துவதால் இரசாயன உரம் போடத்தேவை இல்லை. பூச்சிகளை எதிர்கொள்ளும் எதிர்ப்பு சக்தி பாரம்பரிய விதைகளுக்கு உண்டு. தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன. குழியடிச்சான் சம்பா,மாப்பிள்ளை சம்பா, குடவாலை சம்பா, கல்லுண்டை சம்பா, கவுனி அரிசி போன்றவை பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
நம் முன்னோர்கள் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க பல யுக்திகளை கையாண்டனர்.தொடர்ந்து மூன்று அமாவாசை நாட்களுக்கு விதைகளை காய வைத்தனர் இதனால் விதைகளில் பூச்சி வராமல் இருந்தது.பஞ்சாங்கம் போன்றவை உருவாக்கி அதன் மூலம் கால நிலைகளை அறிந்து இயற்கைக்கு ஏதுவாக விதைகளை நட்டனர். பருவத்தே பயிர் செய்தனர் .இவையெல்லாம் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் தான்.நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாய் பொக்கிஷமாய் சேர்த்து வைத்த பாரம்பரிய விதைகளை நாம் இன்று தொலைத்து கொண்டிருக்கிறோம்.
கண் இருந்தும் குருடராய் அயலான் காட்டிய தவறான வழியில் சென்று தரமற்ற விதைகளை நட்டதால் நாம் நம் நிலத்தை மாசு படுத்தினோம், மண்ணில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகளை அழித்தோம். ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் பாரம்பரிய விதைகளின் அருமையை உணர்ந்து அதனை சேகரித்து பயிர் இடுகின்றனர். மேலும் பாரம்பரிய விதைகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துகின்றனர்.இவையெல்லாம் நன்மைக்கான மாற்றங்கள் ஆகும்.
தொழில்நுட்ப கருவிகள்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் இன்று விஞ்ஞானிகள் போல திகழ்கின்றனர், விவசாயத்தை எளிமைப்படுத்த பலவித கருவிகளை தாயாரிக்கின்றனர்.
கரும்புதோகைகளை மூடாக்கு போடும் வகையில் பொடி பொடியாக வெட்டி தரும் இயந்திரம் ஸ்ரீநாட் . இதன் மூலம் மூடாக்கு போடும் வேலை எளிமையாகிறது.
செடியில் இருந்து கடலையை பிரிதெடுக்கம் கருவியை புதுச்சேரியை சேர்ந்த H.M.அந்தோணி என்பவர் கண்டுபிடித்திருக்கிறார்.
மதுரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்பவர் சிறிய பரப்பளவு கொண்ட வயல்களில் கரும்புகளை வெட்ட கரும்பு வெட்டும் கருவியை கண்டுபிடித்திருக்கிறார்.
செல்போன் மூலம் பம்பு செட்டை இயக்கும் மென்பொருளை கோயம்புத்தூரைய் சேர்ந்த பொறியியல் பட்டதாரி அருண் கண்டுபிடித்திருக்கிறார்.
இதனால் விவசாயிகள் மிகவும் பயன்பெறுகின்றனர்.
இப்படி புதுப்புது தொழில்நுட்ப கருவிகளை இயற்கை விவசாயத்தில் உபயோகப்படுத்தி பயன் பெறுவோம்.
முடிவுரை
“பஞ்சமோ பஞ்சம் என்றே – நிதம்
பரித்தவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின்றாரே – இவர்
துயர்களைத் தீர்ககவோர் வழியில்லையே”
என்று வேதனையுற்றான் பாரதி. மக்களின் வேதனையை, அவர்களுக்கு வந்த சோதனையை நீக்க ஒரே வழி செலவு குறைந்த, வரவு நிறைந்த இயற்கை விவசாயத்தொழில்நுட்பமேயாகும்.
பசுமை புரட்சியின் தந்தை டாக்‌டர் எம்.எஸ் சுவாமிநாதன் கூட ‘நிலைத்த நீடித்த இயற்கையோடு இணைந்த விவசாயம் தான் இனி சரிப்பட்டு வரும்’ என்று வலியுறுத்தத் தொடங்கிவிட்டார்.இயற்கை விவசாயத்தின் மகிமை பற்றி மக்களிடம் விளக்க இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர், பசுமை விகடன் இதழ் போன்றோர் பெரும் முயற்சி மேற்கொள்கின்றனர்.
அவர்களின் வழிகாட்டுதல் மூலமாக இன்று நாம் நாட்டில் பல விவசாயிகள் இயற்கை வேளாண்மைக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர், மறுமலர்ச்சியை உருவாக்கி வருகின்றனர்.சுற்றுச்சூழல் மாசுப்பட்டதின் விளைவாக இன்று தாய்ப்பாலில் கூட விஷம் என்ற நிலைமை உருவாகி விட்டது, இனியும் நாம் தாமதித்தோமென்றால் தரணி தரை மட்டமாக்கி விடும். இயற்கை வேளாண்மை வெற்றி அடையுமா என்ற கேள்விக்கு விடையாக “world watch Institute” 2006ம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுகளே ஆதாரமாகும். அதில் உலக உழவர்கள் அனைவரும் இன்றே இயற்கை விவசாயத்திற்கு மாறினால் வளர்ந்த நாடுகளில் விளைச்சல் இப்போது இருப்பதை காட்டிலும் 80% இருக்கும். வளரும் நாடுகளில் 2 முதல் 4 மடங்கும் இருக்கும்” என்று கூறுகிறது. உலகில் வளரும் நாடுகளில் தான் மக்கள் தொகை அதிகம் , எனவே அந்நாடுகளில் வேளாண்மை வெற்றியடைந்தால் உலகம் வெற்றியடையும். எனவே இயற்கை வளம் பேணும், மண் வளம் காக்கும், தரமான சத்துக்கள் கொண்ட காய்கறிகளை விளைவித்துத் தரும் இயற்கை வழி விவசாயத்தை இனிதே வரவேற்போம்.
இயற்கை விவசாயம் பண்ணுவோம் – இன்று
இன்னல்களால் இம்சைபடும் நாம் – இனிமேல்
இன்பத்தை மட்டுமே அனுபவிப்போம்
இயற்கையின் போக்கில் செல்வோம்
இனிதே வாழ்வோம்!
நன்றி: மணற்கேணி
நல்லூர் முழக்கம்